ஸைனாப்

உதயத்தை வென்றவர்கள்

 

இல்லம்

ஸைனாப்

 

ஸஞ்ஜான் கொந்தளிப்பு

 

கடந்த நூற்றாண்டில், பாப்'இ சமயத்தின் ஆரம்பகாலங்களில், பாரசீகத்தின் பல இடங்களில், பாப்'இகள் எதிர்ப்புகளுக்கு உள்ளானார்கள். அந்நேரங்களில் அவர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் ஒன்றுதிரண்டு எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இவ்விதமான ஒரு சம்பவம், பாரசீகத்தின் ஸஞ்ஜான் எனும் இடத்திலும் நிகழ்ந்தது. அங்கு எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பாப்'இகளில் ஒருவளாக, ஸைநாப் எனும் இளம்பெண், யாரும் அறியா வண்ணம், ஆண் வேடமிட்டு ஆண்களோடு ஆணாக போர் செய்தாள். அவளுடைய வீர தீரச் செயலின் வரலாறே பின்வரும் கதை.

 

அந்த வீரம் நிறைந்த தோழர்களுக்கு உயிரூட்டும் திவ்ய பற்றின்மையெனும் ஆவி குறித்த மேல் ஆதாரங்கள், ஒரு கிராமத்துக் கண்ணியின் நடத்தையின் வாயிலாக வழங்கப்பட்டது. அவள், தன்னிச்சையாக, கோட்டைப்பாதுகாவலர்களோடு ஒன்றுசேர்ந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் கூட்டத்தோடு தானும் இணைந்துகொண்டாள். அவளுடைய பெயர் ஸைநாப் என்பதாகும். அவளுடைய சொந்த ஊர் ஸஞ்சானுக்கு அருகேயுள்ள ஒரு குக்கிராமமாகும். அவள் அழகுமிகுந்தவள், சிவந்த வதனமுடையவள்; மேன்மைமிக்க நம்பிக்கையினால் தூண்டப்பட்டிருந்தவள்; அஞ்சாத வீரத்தைப் பெற்றிருந்தவள் தன்னுடைய ஆண் தோழர்கள் அடைந்த சோதனைகளும், கஷ்டங்களும், ஆணுடையில் மாறுவேடமிட்டும், எதிரிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களை முறியடிப்பதில் பங்குபெற வேண்டுமெனவும் அவளுள் ஓர் அடக்கமுடியாத ஆவலை உண்டாக்கின. நீண்ட உடையனிந்து, தன்னுடைய ஆன் துணைவர்கள் அனிந்துள்ளதைப் போல் தலைப்பாகை அனிந்து, தன்னுடைய சுருளான கூந்தலை வெட்டிக்கொண்டும், போர்வாள் தரித்தும், பிறகு, ஒரு துப்பாக்கியையும், கேடயத்தையும் பற்றிக்கொண்டு, அவர்களிடையே தன்னையும் சேர்ந்துக்கொண்டாள். தடையரணுக்குப் பின்னால் அவள் தன்னுடைய இடத்தைப் பிடித்திட பாய்ந்து முன்சென்றபோது அவள் ஒரு கன்னி என்பதை யாருமே சந்தேகிக்கவில்லை. எதிரிகள் தாக்கிய உடனே, அவள் வாளை உருவிக்கொண்டும், “யா ஷாஹிபு‘ஸ்-ஸமான்!” எனக் குரலெழுப்பியவாறும் தனக்கெதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சக்திகளின் மீது வியக்கத்தக்க துணிவுடன் பாய்ந்தாள். நண்பர்களும் பகைவர்களுமாக, தங்கள் கண்கள் அதற்குச் சமமாக அதுவரைக் கண்டிராத ஒரு துணிவையும், செயல்வளத்தையும் கண்டு அதிசயித்தனர். அவளுடைய எதிரிகள், சினமடைந்த கடவுள் தங்களுக்கு இட்ட ஒரு சாபக்கேடன அவளைப் பிரகடணப்படுத்தினர். மனத்தளர்வினால் பாதிக்கப்பட்டும், தங்களுடைய தடையரண்களைக் கைவிட்டும், வெட்கக்கேடான நிலையில் அவர்கள் சிதறியோடினர்.

 

பாதுகாப்பு மேடையிலிருந்து எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்கானித்துக்கொண்டிருந்த ஹுஜ்ஜாட், ஸைனாபைக் கண்டுகொண்டும், அக்கன்னிப்பெண் அவ்வேளையில் வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஆற்றலைக் கண்டு அதிசயிக்கவும் செய்தார். தன்னைத் தாக்கியவர்களை அவள் விரட்டி சென்றுகொண்டிருந்தாள். அப்போது, ஹுஜ்ஜாட் தமது ஆட்களிடம் அவள் மேற்கொண்டு எதிரிகளை தொடர்ந்து பின்செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு அரணுக்கு திரும்புமாறும் கூறச்சொன்னார். அவளுடைய எதிரிகள் அவள் மீது தொடுத்த தாக்குதல்களை எதிர்கொண்டு அவள் பாய்ந்து சென்றபோது, “இவ்வித ஊக்கத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்திடும் ஆற்றலை எந்த ஓர் ஆணும் காட்டியதில்லை“, என அவர் கூற செவிமடுக்கப்பட்டது. அவளுடைய அத்தகைய நடத்தையின் குறிக்கோள் குறித்து அவளிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, அவள் கண்களில் குபுக்கென கண்ணீர் பெருகிட, பின்வருமாறு கூறினாள்: “என்னுடைய சக சிஷ்யர்களின் அவதியையும், சிரமங்களையும் நான் கண்ணுற்ற போது என் உள்ளம் பரிதாபத்தினாலும், சோகத்தினாலும் இரணமானது. என்னால் தடுக்கப்பட முடியாத ஓர் உட்தூண்டலினால் நான் முன்சென்றேன். என்னுடைய ஆண் தோழர்களோடு என் அனைத்தையும் அர்ப்பணம் செய்திடும் சலுகையை நீர் எனக்கு அளிக்க மறுத்து விடுவீர் என நான் பயந்தேன்.” “நீ நிச்சயமாகவே அரணில் குடிகொண்டுள்ள மற்றவர்களோடு சேர்ந்துகொள்ள முன்வந்த அதே ஸைனாப்தானே?” என ஹஜ்ஜாட் விளித்தார். “ஆமாம்” என அவள் பதிலளித்தாள். “நான் பெண் என்பதை இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதை உங்களுக்கு உறுதிகூற விரும்புகிறேன். நீங்கள் ஒருவரே என்னைக் கண்டுகொண்டுள்ளீர்கள். பாப் அவர்களின் பெயரால், மதிப்பிட முடியாத அந்த சலுகையும், உயிர்த்தியாகமெனும் கிரீடமுமான, என் வாழ்வின் ஒரே ஆவலை நான் அடைவதை தடுத்துவிடாதீர்கள்.“

 

அவளுடைய வேண்டுகோளின் தொனி மற்றும் சாயலினால் ஹுஜ்ஜாட் மிகவும் ஆழமாக கவரப்பட்டார். அவளுடைய ஆன்மாவின் கொந்தளிப்பை ஆசுவாசப்படுத்த முயன்றார், அவள் சார்பான தமது பிரார்த்தனைகளை அவளுக்கு உறுதிபடுத்தினார், மற்றும் அவளுடைய மேன்மைமிக்க மன உரத்தின் அறிகுறியாக, ரஸ்டம்-அலி எனும் நாமத்தை அவளுக்கு வழங்கினார். “இதுவே எல்லா இரகசியங்களும் கண்டறியப்படும் ஒரு நாளான மறு உயிர்ப்புறும் நாளாகும். அவர்களுடைய புறத்தோற்றத்தினால் அல்லாது, அவர்களுடைய நம்பிக்கையின் குணவியல்பு மற்றும் வாழ்க்கையின் விதத்தினாலும், ஆண் பெண் எனும் பேதமில்லாமல் இறைவன் தமது படைப்பினங்களை மதிப்பிடுகிறார். இழம் வயதுடையவளும், முதிர்ந்த அனுபவம் இல்லாதவளுமான ஒரு கன்னிப்பெண்ணாக இருந்தபோதும், வெகு சில ஆண்களே விஞ்சக்கூடிய மனோ உறத்தையும், வளத்தையும் நீ வெளிப்படுத்தியுள்ளாய்.” அத்தோடு, அவளுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, அவளுடைய சமயம் அவளக்கு வழங்கியுள்ள கட்டுப்பாடுகளை மீறாது இருக்கு அவளை எச்சரிக்கவும் செய்தார். “வஞ்சகமான எதிரிகளிடமிருந்து நம்முடைய உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளவே நாம் கேட்டுக்கொள்ளப்படடுள்ளோமே அன்றி, அவர்கள் மீது புனித யுத்தம் மேற்கொள்வதற்காக அல்ல.,” என அவளுக்கு ஞாபகமூட்டினார்.

 

சுமார் ஐந்து மாதங்களுக்கும் குறையாத காலத்திற்கு, எதிரிகளின் சக்திகளை இணையற்ற வீரத்துடன் தொடர்ந்தாற்போல் எதிர்த்து நின்றாள் அக்கன்னி. உணவையும் தூக்கத்தையும் மறந்து, தான் மிகவும் நேசித்த சமயத்திற்காக ஆர்வம் மிகுந்த அக்கறையுடன் உழைத்தாள். தனது குறிப்பிடத்தக்க துணிவின் உதாரணத்தினால், தடுமாற்றம் அடைந்த சிலருடைய மன உறுதியை மறுபலப்படுத்தி, அவர்கள் ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டினாள். அந்த காலத்தில் அவர் தரித்திருந்த வாள் அவளுடைய இடுப்பிலேயே இருந்துவந்தது. நித்திரை என அவள் கொள்ள முடிந்த அந்த குறுகிய சில நேரங்களில் தன்னுடைய வாளின் மீதே அவளுடைய தலை சாய்ந்தும், அவளுடைய கேடயமே அவளுடைய உடலின் போர்வையாகவும் இருந்தது. அவளுடைய ஒவ்வொரு துணைவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலை ஒதுக்கப்பட்டிருந்தது. அதை அவர்கள் பாதுகாத்தும், தற்காத்தும் வரவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வீரமங்கை எங்கு வேண்டுமானாலும் போய்வர சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. தன்னைச் சுற்றிலும் ஏற்பட்ட கொந்தளிப்புகளின் நடு மையத்திலேயே அவள் இருந்தாள். எதிரி தாக்க முயன்ற எந்த நிலையானாலும் அங்கு விரைந்தோடி காப்பற்றிடவும், தன்னுடைய ஊக்குவிப்போ, ஆதரவோ தேவைப்படும் எவருக்கும் அதை வழங்கிடவும் ஸைனாப் தயாராகவே இருந்தாள். அவளுடைய வாழ்வின் இறுதி நெருங்கிக்கொண்டிருந்த வேளை, அவளுடைய இரகசியத்தை அவளுடைய எதிரிகள் கண்டுகொண்டனர். அவள் ஒரு பெண் என்பதை உணர்ந்தும், தொடர்ந்து அவளுடைய ஆதிக்கத்தினால் மருளவே செய்தும், அவளுடைய வருகை கண்டு நடுநடுங்கவும் செய்தனர். அவளுடைய கிறீச்சுக் குரல் அந்த எதிரிகளின் உள்ளங்களில் பெரும் பீதியைக் கிளரி, அவர்களுள் மனத்தளர்வையும் ஏற்படுத்த போதுமானதாகவே இருந்தது.

 

ஒரு நாள், திடீரென எதிரி படைகளினால் அவளுடைய துணைவர்கள் சூழ்ந்துகொள்ளப்படும் நிலையைக் கண்டு, ஹுஜ்ஜாட்டிடம் அவள் சஞ்சலத்தோடு விரைந்தோடி, அவரது கால்களில் வீழ்ந்து, கண்ணீர் மல்கிய கண்களுடன் அவரைக் கெஞ்சி, அவர்களுடயை உதவிக்கு தான் விரைந்துபோக மன்றாடினாள். “என் வாழ்வு, அதன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்பது என் உணர்வு,” ”எதிரிகளின் வாளுக்கு நானே இறையாவேன். என் எல்லைமீறலை மன்னித்து, எவருக்காக நான் என் உயிரை அர்ப்பணம் செய்ய ஏங்குகின்றேனோ அந்த என் தலைவரிடம் எனக்காக பரிந்து பேசிட உங்களை மன்றாடி கேண்டுக்கொள்கின்றேன்.

 

ஹுஜ்ஜாட் பெரிதும் உணர்ச்சி வசப்பட்டிருந்த நிலையில் பேச முடியாமல் இருந்தார். அவருடைய மௌனத்தினால் உற்சாகம் அடைந்தும், அது சம்மததிற்கு அறிகுறி எனும் முடிவிற்கும் வந்த ஸைநாப், வாசலுக்கு வெளியே பாய்ந்தும், ஏழு முறை “யா ஷாஹிபு‘ஸ் ஸமான்!” என குரலெழுப்பியும், தன்னுடைய சகாக்கள் பலரை சாய்த்துவிட்ட கரங்களை வீழ்த்திட பாய்ந்து சென்றாள். “உங்களுடைய துர்செயல்களால் உங்கள் சமயத்தின் நற்பெயரை ஏன் மாசுபடுத்துகிறீர்கள்?” என உரக்க குரலெழுப்பியாவாறு அவர்கள் மீது பாய்ந்தாள். “நீங்கள் உண்மை பேசுகிறவர்களாக இருந்தால், ஏன் இழிவோடு எனக்குப் புறமுதுகிட்டு ஓடுகிறீர்கள்?” என உரக்கக் கேட்டாள். எதிரிகள் எழுப்பியிருந்து தடுப்பு அரண்களை நோக்கி ஓடி, முதன் மூன்று அரண்களின் காவலர்களை விரட்டியடித்து, நான்காவதையும் வென்றிடுவதற்கு போராடிக்கொண்டிருந்தபோது, தோட்டக்கள் மாரியில் அவள் தரையில் சாய்ந்தாள். அவளுடைய எதிரிகளிடையே அவளுடைய கற்பு குறித்து எவருமே எந்தக் கேள்வியும் எழுப்பவோ, அவளுடைய நம்பிக்கையின் மேன்மையையும், அவளுடைய நடத்தையின் நித்தியத்தன்மையும் புறக்கனிக்க தைரியமற்றிருந்தனர். அவளுடைய பக்திவிசுவாசத்தின் மேன்மையினால், அவளுடைய இறப்புக்குப் பிறகு சுமார் இருபதுக்கும் குறையாத பெண்கள் பாப் அவர்களுடைய சமயத்தை ஏற்றனர். தங்களுக்கு பரிச்சயமான கிராமத்துப் பெண்னாக அவளை அவர்கள் காணவில்லை. மனித நடத்தைக்கான அதிமேன்மைமிக்க கோட்பாடுகளின் மறுஅவதாரமாகவே அவள் இருந்தாள், அவள் கொண்டிருந்த நம்பிக்கை ஒன்று மட்டுமே வெளிப்படுத்தியிருக்கக்கூடிய அதி ஆன்மீகத்தின் ஜீவ உருவாகத் திகழ்ந்தாள்.

 

-- நபில், உதயத்தை வென்றவர்கள்

zanjan 

ஸஞ்ஜான் ஊரின் பழைய தோற்றம்

hujjats mosque

ஹுஜ்ஜாட்டுக்காக அவரது தோழர்கள் கட்டிய பள்ளிவாசல் 

hujjats house 

ஹுஜ்ஹாட்டின் பாழடைந்த வீடு