அப்து'ல்-பஹா

பஹாய் சமயத்தின் முழுநிறை எடுத்துக்காட்டாளர்

 

இல்லம்

அப்து'ல்-பஹா, பஹாய் போதனைகளின் முழுநிறை எடுத்துக்காட்டாளர்

 

(அப்து'ல்-பஹா பற்றிய சில விவரங்கள்:

 

பஹாவுல்லாவுக்கும் அவருடைய மனைவியான ஆசிய்யா காஃனும் அவர்களுக்கும் பிறந்த பிள்ளைகளும் உயிரோடிருந்தவர் மூன்று பேர். அவர்களுள் அப்து'ல்-பஹா மூத்தவராவார். சிறு வயது முதற்கொண்டே தமது தந்தையாரின் உயர்ந்த ஸ்தானத்தை அவர் உணர்ந்திருந்தார். பிற்காலத்தில் பஹாவுல்லா இவரையே தமது சமயத்தை வழிநடத்திச்செல்லவும் தமது போதனைகளின் அதிகாரபூர்வ விரிவுரையாளராகவும், பிழைபடா எடுத்துக்காட்டாளராகவும் நியமித்தார். இவரது இயற்பெயர் அப்பாஸ் என்ற போதிலும் இவர் தமது பெயரை அப்து'ல்-பஹா அல்லது கடவுளின் சேவகன் எனவே வைத்துக்கொண்டார். )

 

பஹாவுல்லா அவர்கள் சியாச் சால் சிறையில் அடைக்கப்பட்டபோது அப்து’ல்-பஹா அவர்களுக்கு எட்டு வயது. அவர் தம் தந்தையை அங்கு சென்று கண்டபோது, அவரது கழுத்தில் சங்கிலி இணைக்கப்பட்ட இரும்புவளையம் மாட்டப்பட்டிருந்ததைக் கண்டார்.

 

வயது ஆக ஆக அப்து’ல்-பஹா அவர்கள் தமது தந்தையாரின் மிக நெருக்கமான துணைவராக இருந்து பல முக்கிய காரியங்களை அவருக்காக செயல்படுத்தினார். தமது தந்தையாரைக் காண வருவோரை முன்கூட்டியே நேர்காணல் செய்து துர்நோக்கம் கொண்டோர்களை அடையாளம் கண்டு அவரது காரியங்களுக்கு தடைகள் நேரா வண்ணம் தகுந்தவர்களை மட்டும் அவருடைய முன்னிலைக்கு அனுப்பிவைப்பார்.

ஆக்கா நகரில், அங்கு சிறையில் இருந்த அனைவரும் டைஃபாய்ட், மலேரியா, மற்றும் வாந்திபேதியால் பாதிக்கப்பட்ட போது சிறிதும் ஓய்வில்லாமல் நோயாளிகளை குளிப்பாட்டி, பேணி, உணவளிக்கவும் செய்தார். இறுதியில், பெரிதும் களைத்துப் போனவராக, தாமும் நோய்வாய்ப்பட்டு சுமார் ஒரு மாத காலம் ஆபத்தான நிலையிலிருந்தார்.

 

தன்னலமின்மை, கற்றறிந்தமை, மிகுந்த பணிவு ஆகிய நற்பண்புகளுடன் பஹாவுல்லா அவர்கள் அவர்மீது கொண்டிருந்த வெளிப்படையான மதிப்பு ஆகியவை, அவரை ‘மாஸ்டர்’ என எல்லாரும் அழைத்திட காரணமாக இருந்தது. இன்றளவும், பஹாய்கள் அவரை இவ்வாரே அழைத்து வருகின்றனர்.

 

இளைஞராக அப்து’ல்-பஹா அவர்கள்

 

பஹாவுல்லா அவர்கள் விண்ணேற்றம் அடைந்தபோது அவரது உயில் மற்றும் சாசனத்தின் வெளிப்படையான நிபந்தனைகளையும் மீறி, பொறாமை கொண்ட சில உறவினர்கள் அப்து’ல்-பஹா அவர்களின் ஸ்தானத்தை கைப்பற்ற முயற்சித்தனர். பேராசையுடைய இந்த நபர்கள் தங்களைச் சுற்றிலும் ஆதரவாளர் கூட்டம் ஒன்றை உருவாக்கவும் முனைந்தனர்.

 

உலகின் பிற சமயங்களில் வெகு விரைவாக உட்பிரிவுகள் ஏற்பட்டதைக் காண்கையில், இத்தகைய பிரிவினைவாதக் கும்பல்கள் எதுவுமே தங்களை நிலைப்படுத்திக்கொள்ளவோ பஹாய் சமயத்துள் உட்பிரிவுகளை உண்டாக்கவோ இயலாமல் போயினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இறுதியில், அத்தகைய உட்பிரிவுகளை உருவாக்க முனைந்த அப்பிரிவினைக் கும்பல்களின் தலைவர்கள் மடிந்த போது அக்கும்பல்களும் சிதைந்து போய் எந்த உட்பிரிவோ சமயப்பிரிவோ நீடித்திருக்கவில்லை. பஹாய்கள் இத்தகைய ஐக்கியத்தை பஹாய் ‘திருவுடன்பாட்டின்’ ஆற்றலாகக் கருதுகின்றனர்.

 

அப்து’ல்-பஹா அவர்கள் மேற்கத்திய நாடுகள் புரிந்துகொள்ளும் வகையில் தமது தந்தையாரின் உலகந்தழுவிய தூரநோக்கை விளக்கிடுவதில் முக்கிய பங்காற்றினார். இந்த நடவடிக்கையின் வெற்றி சிறிய, மத்திய கிழக்கு சார்ந்த ஒரு இயக்கமென இருந்த பஹாய் சமயத்தை இன்றிருப்பதைப் போன்று ஓர் உலக சமயமாக தன்மைமாற்றம் அடைவதை பெரிதும் துரிதப்படுத்தியது தமது தந்தையாரின் மறைவுக்குப் பிறகும் அப்து’ல்-பஹா அவர்கள் ஒட்டமான அரசின் கைதியாகவே இருந்தார். கடிதங்கள் வாயிலாகவும், நேரடித் தொடர்புகளின் வாயிலாகவும், பாலஸ்தீனத்திற்கு பயணம் மேற்கொண்ட மேற்கத்திய விசுவாசிகளுடனான தொடர்பின் வழியாக அவர் பஹாய் சமயத்தை மத்தியக் கிழக்கிற்கும் அப்பால் பரவச் செய்தார்.

 

இளந்துருக்கியர் புரட்சிக்குப் பின், அப்து'ல்-பஹா நாட்டிற்கு வெளியே பிரயாணம் செய்யக்கூடிய சுதந்திரத்தை அடைந்தார். ஆகஸ்ட் 1911ல், அவர் புனித நிலத்தை விட்டு மேற்கத்திய நாடுகளுக்கான நான்கு மாத பிரயாணம் ஒன்றை மேற்கொண்டார். அதன் போது அவர் லண்டன் மற்றும் பாரீசிற்கும் விஜயம் செய்தார். அங்கு அவர் மேற்கத்திய நம்பிக்கையாளர்களுடன் சந்திப்புகள் நடத்தி, தினமும் பஹாய் சமயம் மற்றும் அதன் குறிக்கோள்கள் குறித்து சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார்.

 

பின்வந்த இளவேனிற் காலத்தில், ஒரு வருடகால பயணம் ஒன்றை அப்து'ல்-பஹா அவர்கள் மேற்கொண்டார். அதன் போது அவர் ஐரோப்பாவுக்கு மீண்டும் பயணம் செய்து, பிறகு ஐக்கிய அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் பயணங்கள் மேற்கொண்டார். இந்த பயணங்கள் அந்த இரு நாடுகளிலும் பஹாய் சமயத்தின் விரிவாக்கத்தை பெரிதும் தூண்டின.

 

வட அமெரிக்காவின் 40க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு அவர் பிரயாணம் செய்தார். அவ்வேளைகளில் நம்பிக்கையாளர் மற்றும் அல்லாதார் அனைவராலும் அவர் பெருமம் மரியாதையுடனும் ஆரவாரத்துடனும் வரவேற்கப்பட்டார். நகரம் நகரமாக அவர் தேவாலயங்களிலும், யூதக்கோவில்களிலும், புகழ்வாய்ந்தோர் முன்னிலையிலும் இயக்கங்கள் முன்னிலையிலும் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டார்.

 

இதன் முடிவான விளைவுகளாக, பஹாய் சமயம் சமுதாய மற்றும் சமய சீர்திருத்தங்களுக்கான ஒரு புதிய மாபெரும் சக்தியாக நிலைப்பாடு கண்டது. ஒரு புதிய மற்றும் அமைதியான மனித சமுதாயத்திற்கான பஹாய் சமயத்தின் அறைகூவலை உள்ளடக்கிய பஹாவுல்லா அவர்களின் செய்தி தொழில்துறை நாடுகளில் பிரகடணப்படுத்தப்பட்டது மற்றும் ஒரு புதிய தலைமுறையான நம்பிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்டனர்.

 

சமயத்தை அனைத்துலகமயமாக்குவதற்கான தொடர்ந்து செயல்படும் ஒரு திட்டத்தை அப்து'ல்-பஹா அவர்கள் நிறுவினார். வட அமெரிக்க நம்பிக்கையாளர்களுக்கான கடிதங்களின் வரிசை ஒன்றில், உலகம் முழுவதும் சென்று பஹாய் சமயத்தையும் அதன் கோட்பாடுகளையும் பிரகடனப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

முதலாவது உலக யுத்தம் மூள்வதற்கு முன்பாகவே அப்து'ல்-பஹா புனித நிலம் திரும்பிவிட்டிருந்தார். மேற்கு நாடுகளுக்கான அவருடைய செய்திகளில், உலகம் விரைவில் எதிர்நோக்கும் அப் போர் குறித்து எச்சரிக்கை விடுத்தும், அத்தகைய போர்களை தவிர்க்கக்கூடிய உலக காமன்வெல்த் அமைப்பு ஒன்றை நிறுவுவதன் அவசியத்தையும் தொடர்ந்தாற் போன்று எடுத்தியம்பினார். போர்க்காலத்தின் போது, அவரும் அவரது தந்தையாரும் போதித்து வந்த கோட்பாடுகளை செயல்படு்த்துவதில் ஈடுபட்டிருந்தார். உதாரணமாக, அவர் டிபீரியாஸ் எனும் இடத்தில் வெகு விரிவான விவசாயத் திட்டம் ஒன்றை தாமே ஏற்பாடு செய்தார். இத்திட்டம் அப்பிரதேசத்திற்குத் தேவையான கோதுமை தானியத்திற்கான முக்கிய மூலாதாரமாக விளங்கி அப்பிரதேசத்தில் பஞ்சம் ஏற்படுவதையும் தவிர்த்தது. இதன் காரணமாக அப்து'ல்-பஹா அவர்கள் பிரிட்டிஷ் அரசினால் ‘சர்’ பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

 

அப்து'ல்-பஹாவின் மறைவு

 

அப்து'ல்-பஹா நவம்பர் 28, 1921ல் விண்ணேற்றம் அடைந்தார். சதா சச்சரவுகளும் சண்டைகளும் நிறைந்திருக்கும் புனித நிலம், அப்து'ல்-பஹாவின் மறைவின் விளைவால் அதுவரை கண்டறியாக ஒற்றுமையையும் கூட்டு உணர்ச்சிவயப்படுதலையும் கண்டது. யூதர்கள், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், ‘ட்ருஸ் சமயத்தவர் போன்ற அனைத்து சமயக்கோட்பாட்டினர் மற்றும் சமயப்பிரிவினர்கள்; அராபியர்கள், துருக்கியர்கள், குர்ட் இனத்தவர், ஆர்மீனியர்கள் மற்றும் பிற இனத்தவர்களும் அப்துல் பஹாவின் மறைவினால் ஒன்றுசேர்க்கப்பட்டு தாங்கள் எல்லோருக்குமே பொதுவாக நேர்ந்த அவரது மறைவினால் துக்கம் கொண்டனர்.

 

அப்துல் பஹாவின் மறைவு பாலஸ்தீனம் தனது வரலாற்றிலேயே கண்டறியாத ஒரு நிகழ்வாக இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் எல்லா சமய, இனத்தையும் சார்ந்த 10,000 பேர்களுக்கும் அதிகமாகவே கலந்துகொண்டனர். “அவரது மறைவால் துக்கவசப்பட்ட ஒரு பெரும் கூட்டம் கூடியது, ஆனால் அதே வேளைஅவர் வாழ்ந்த வாழ்க்கைகாக அவர்கள் களிப்புணர்வைக் காட்டவும் தவறவில்லை,” என பாலஸ்தீனத்திற்கான அன்றைய பிரிட்டிஷ் தூதர் குறிப்பிட்டார். ஜெருசலத்தின் ஆளுனர், “அந்த ஈம நிகழ்வின் வெகுவான எளிமை அறைகூவிய ஒன்றுபட்ட வருத்த உணர்வையும் மரியாதையையும் நான் இதுவரை கண்டதேயில்லை,” என எழுதினார்.

அப்து'ல்-பஹாவின் பூதவுடல் கார்மல் மலையின் மீது அமைக்கப்பட்டிருந்த ‘பா’ப் அவர்களின் கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘பா’ப் அவர்களின் கல்லறைக்குச் செல்லும் பஹாய்கள் அப்து'ல்-பஹா அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அறைக்கும் சென்று பிரார்த்தனைகள் கூறுவர்.

 

 

"மாஸ்டர் " என அன்புடன் அழைக்கப்படும் அப்து'ல்-பஹா

 

பாஸ்டன், அமெரிக்காவில் மாஸ்டர் அவர்கள்

 

அமெரிக்காவில் அப்து'ல்-பஹா

 

இளைஞராக அப்து'ல்-பஹா

 

அப்து'ல்-பஹாவின் இறுதி ஊர்வலம்