ஓநாயின் மைந்தனுக்கான நிருபம்

 

இல்லம்

ஓநாயின் மைந்தனுக்கான பஹாவுல்லாவின் நிருபம்

 

(மார்ஸியே கேய்ல்)

 

பஹாவுல்லாவின் அதிசிறப்பு வாய்ந்த நிருபங்களில் இதுவே இறுதியானதாகும். அவர் நம்மைவிட்டு பிரிவதற்கு முன்பு இறுதியாக எழுதியது; அதற்கு முன்பாக பாப் அவர்கள், "எல்லா துன்பங்களும் அத்துன்பத்தின் நிழல்களே", என எழுதத் தூண்டிய சம்பவம் நடந்தேறியும் இருந்தது. பஹாவுல்லா நமக்காக வெளிப்படுத்திய நூறு நூல்களில் இதுவே இறுதி நூலாகும்.

 

இந்நூல் இஸ்பாஃஹான் நகரைச் சார்ந்த, 'ஓனாயின் மைந்தன்' என வழங்கப்பட்ட ஒரு மதகுருவிற்கு எழுதப்பட்டதாகும். இவருடைய தந்தை "ஒளிவீசும் இரட்டைத் தீபங்களான" உயிர்த்தியாகிகளுள் அரசர், உயிர்த்தியாகிகளுள் அன்புக்குகந்தவர் ஆகிய இருவருடைய மரணத்திற்கும் வழிவகுத்த வார்த்தகளை உச்சரித்தவராவார். இந்த இருவரும் இஸ்ஃபாஹான் நகரின் அருகே இரு மணல் சவக்குழிகளில் புதைக்கப்பட்டனர். (பல வருடங்களுக்குப் பிறகு கீத் ரேன்ஸம் கெஹ்லர் எனப்படும் அமெரிக்க பஹாய் அந்த இருவருக்கும் மலர்கள் வைத்தும், அங்கு மண்டியிட்டு கண்ணீர் வடிக்கவும் செய்தார்; பிறகு சில நாட்களில் அவரே நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். நண்பர்கள் அவரை அதே மணல் புதைகுழிகளுக்குக் கொண்டு சென்று அந்த இருவருக்கும் அருகிலேயே புதைத்தனர்.)

 

ஆஃகா நஜஃபீ எனப்படும் இந்த மதகுரு மன்னிக்கமுடியாத அந்தப் பெரும் பாவத்தைப் புரிந்தவராவார்; அவர் திருவொப்பந்தத்தை மீறியும், புனித ஆவியைப் பழிக்கவும் செய்தவராவார்; அதாவது, அவர் விளக்கை வெறுக்கவில்லை, அறியாமையினால், ஒரு தனி மனிதர் எனும் முறையில் கடவுளின் அவதாரத்தை அவர் வெறுக்கவில்ல, ஆனால் அவர் ஒளியையே வெறுத்தவராவார்; கடவுள் அவதாரம் பிரதிபலிக்கும் நிறைவான இறைவனின் குணங்களை அவர் வெறுத்தார்; தீபத்தில் பிரகாசிக்கும் ஒளியையே அவர் வெறுத்தார் - 'ஒளியின்பாலான இவ்வித வெறுப்புக்கு நிவாரணமே கிடயாது...'

 

ஆகவே, இந்த மதகுரு பாவிகளிலேயே நம்பிக்கைக்கே வழியில்லாத ஒரு பாவியாவார். அவருடைய தீய நோக்கங்கள், பல வழிகளில் வெளிப்பாடு கண்டன. அவற்றுள், இஸ்ஃபாஹானில், தியாகமரணமுற்ற மிர்ஸா அஷ்ரஃப்பின் (பஹாவுல்லாவின் பொறுக்கு மணிகள் நூலில் நாம் படித்த ஸஞ்சான் நகரில் தலை வெட்டுண்ட அந்த சிய்யிட் அஷ்ரஃப் அல்லர்) உடலை இவர் தமது சீடர்களுடன் சேர்ந்து காலால் உதைக்கவும், துவைக்கவும் செய்தார்.

 

இருந்தபோதிலும், பஹாவுல்லா இந்நிருபத்தை ஆகா நஜபீஃ ஒப்புவிக்க வேண்டிய ஒரு மன்னிப்பு பிரார்த்தனையின் வாயிலாகவே துவங்குகிறார். தம்மை அழிக்க முனைந்த தமது துரோககுணம் கொண்ட ஒன்றுவிட்ட தம்பியாகிய மிர்ஸா யாஹ்யாவுக்கு தமது அதி புனித நூலில் மன்னிப்பு வழங்கிட முன்வந்தது போலவே இந்த "ஒப்பந்தமீறி"க்கும் மன்னிப்பு வழங்க பஹாவுல்லா முன்வருகிறார். இது தாம் விரும்பியதைச் செய்பவரும், அவரது செயல்களுக்கு காரணம் ஏதும் கேட்க முடியாதவருமான இறைவனின் திருவிருப்பத்தின் தன்னிச்சையான இயக்கம் எனும் கோட்பாடாகிய, 'படா' எனப்படுவதன் வெளிப்பாடாகும். இது, எல்லாமே முன்விதித்தபடியே இயந்திர முறையில் இயங்குகிறது என நம்பும், அதாவது இவ்வளவு பாவங்கள் இவ்வளவு தண்டனையை பெற்றுத்தருகின்றன, இவ்வளவு நன்மைகள் இவ்வளவு பிரதிபலன்களைப் பெற்றுத் தருகின்றன என நம்பும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் எந்த அளவுக்கு தவறான நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கின்றது. இவர்களைப் பொருத்த வரையில் கடவுள் என்பவர், இரயில் வண்டிபோல் இயந்திரமென இயங்கும், வெறும் சக்தியே ஆவார். ஆனால், இவர்கள் தாங்களும் அதே போன்று வெறும் சக்திகளே என அழைக்கப்படுவதை விரும்பமாட்டார்கள். (பாரசீக பாயானில் பாப் அவர்கள் இந்த 'படா' கோட்பாட்டை உருவாக்குகிறார்.

உமது மன்னிப்பு எனும் உயிர்நீர்களை உமது அன்புக்கருணையெனும் கைகளிலிருந்து பெறுவதற்கு வெட்கப்பட்டு, உமது ஆதரவு எனும் வாயிலின் முன் இறந்தவனென கிடக்கும் இவனை, நீர் காண்கின்றீர்.

 

உம்மை முன்மொழிந்திட ஒவ்வொரு மதபீடத்தையும் ஒதுக்கிவைக்குமாறு நீர் விதித்துள்ளீர்... ஆனால், நானோ உமது திருவொப்பந்தத்தின் மீறலை அறிவிப்பதற்காக அவற்றின் மீது ஏறியுள்ளேன்...

 

ஆண்டவரே, என் ஆண்டவரே! மீண்டும், ஆண்டவரே என் ஆண்டவரே! மீண்டும் ஒரு முறை ஆண்டவரே, என் ஆண்டவரே!

பிரார்த்தனை செய்யும்படி இந்த நிருபம் முழுவதும் அந்த மதகுரு பலமுறை அறிவுறுத்தப்படுகிறார்; ப‎ஹாவுல்லாவின் புத்திரர்களில் ஒருவரைப் போலவே இவரும் அழைக்கப்படுகிறார்; முன்னெழுந்து சமயத்திற்குச் சேவை செய்திடுமாறு; நம்பிக்கை பெறுமாறு, சேவை செய்திடுமாறு, நம்பிக்கை வைக்குமாறு கூறப்படுகிறார்; பஹாவுல்லாவின் முன்னிலையை அடையுமாறு (பஹாவுல்லாவை அவர் அதுவரை பார்த்ததே கிடையாது); 'தான் எனும் சேற்றிலிருந்து' மனிதர்களைக் காப்பாற்றுமாறு; அவர் அழைக்கப்படுகிறார்; அதன் வாயிலாக, உமக்கு முன்னால் இராஜ்யத்தின் கதவுகள் அகலத் திறந்திட... அதிபெரும் சமுத்திரத்தைத் தேடுமாறு... அவர் அறிவுறுத்தப்படுகிறார். ஓ ஷேய்க்! உமது கண் அதன் வாயிலாக களிப்படைந்திட... விண்ணுலகக் குயிலின் கீதங்களை நீர் செவியுறுமாறு யாம் உமக்கு ஆற்றலளித்துள்ளோம்... என கூறுகின்றார்.

 

டாக்டர் அலி-ஃகுலி ஃகான் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளது போல, ப‎ஹாவுல்லா ஆகா நஜாஃபியைப் பல்வேறு தலைப்புக்களால் அழைப்பதானது இக்கடிதம் அவரை மட்டும் குறிக்காமல் பரந்த அளவிலான ஒரு தரப்பினரையே குறிவைக்கின்றது எனலாம். இது 'மனுக்குலத்திற்குச் சமயத்தை வழங்குதலாகும்'; மனிதனின் பல குணவியல்புகள் தனிப்படுத்தப்பட்டும், அவை விமர்சிக்கவும் படுகின்றன. இத்தலைப்புக்களுள், 'ஓ ஷேய்க்'; 'சிறப்புறும் சமயகுருவே'; 'வழிதவறியோனே'! 'இறைவனிடமிருந்து அப்பால் திரும்பியோனே!' ஆகியவையும் உள்ளடங்கும். பல தருணங்களில், வேறு பலவும் குறிப்புடன் உபயோகிக்கப்படுகின்றன: 'பஹாவின் மக்களே'; ' ஓ ஹாடீ', போன்றவை உதாரணங்களாகும். மனிதனின் பல குணவியல்புகள் தனிப்படுத்தப்பட்டும், அவை விமர்சிக்கவும் படுகின்றன. இங்கு ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அவர்களுடைய ஆண்டவரிடமிருந்து அவர்களைப் பிரிக்கும் -லைசிடாஸின் (ஜோன் மில்டனின் கவிதை) குருட்டு வாய்களான’, தீய மதகுருக்கள் மட்டுமல்ல, ஆனால், அதி புனித நூலின் 'பஹாவின் உலமாக்களை' நினைவுகூறும், தேசங்களுக்கு கண்கள் போன்ற நல்ல மதகுருக்களையும் நாம் காணலாம். இங்கு அரசன், பண்டிதன், சாதாரண விசுவாசி, தெய்வீகமானவன், பாவி ஆகியோரையும் நாம் காணலாம்.

 

ஆகவே, இக்கடிதம் ஒரு தனிமனிதனுக்கு வரையப்பட்ட ஒரு நிருபத்திற்கும் மேலான ஒன்றை உள்ளடக்கிய நிருபமாகும். இது சமயத்தைப் பற்றிய ஒரு பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த அளிப்புமுறையாகும். பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி நமக்குக் கூறுவது போல், இப்படைப்பில், 'பஹாவுல்லா தமது எழுத்துக்களுள் சிறப்புப் பண்புகளுடையவையும், புகழ்வாய்ந்தவையுமானவற்றை' மேற்கோளிடுகின்றார் மற்றும் தமது சமயத்தின் வாய்மை குறித்த நிரூபணங்களை எடுத்துக்காட்டுகின்றார்.'

 

பெரும்பாலான நூல்கள் அவற்றின் எழுத்தாளரின் அருகாமைக்கு நம்மை அழைத்துச்செல்கின்றன. ஆனால், பஹாவுல்லாவின் படைப்புக்களை நாம் படிக்கும் போது, அவர் நமது புலப்பாட்டுக்கும் அப்பால் நழுவியே செல்கின்றார். 'பஹாவுல்லாவின் சமயகாலகட்டம்' எனும் நூலில் பாதுகாவலர் நமக்குக் கூறியுள்ளது போல், 'அனுகுவதற்கும் அப்பால் அவர் மகிமைமிகுந்து' நிற்கின்றார்.

 

கீத் என்பவர், 'எல்லா சிகரங்களின் உச்சியிலும் சிரம பரிகாரம் உள்ளது' என கூறுகின்றார். நான் இந்த நூலை மூன்று முறை படித்துள்ளேன் மற்றும் நீண்ட காலங்கள் அதை ஆய்வு செய்தும் உள்ளேன்; ஆனால், எனக்கென்னவோ எல்லா சிகரங்களின் உச்சிக்கும் உயரே மேலும் ஒரு சிகரத்தின் உச்சி உள்ளதாகவே தென்படுகின்றது.


கிட்டத்தட்ட முடியாததென உணர்ந்நிருந்தாலும், இதை ஒரே மூச்சில் படித்து முடித்திடவே விரும்புவீர்கள். அது துரிதமாகவே வரும், மற்றும் பாதுகாவலரின் ஆங்கில மொழிபெயர்ப்பு, அப்பழுக்கில்லாமல் உள்ளது. இதை மேலும் மேலும் அள்ளிப்பருகிடவே விரும்புவீர்கள். நிதானித்து இதைப் பற்றியோ அதைப்பற்றியோ சிந்திக்கத் தோன்றாது. நீங்கள் துரிதமாகப் படித்தும், மீண்டும் கவனிக்கவேண்டும் என நினைக்கும் பகுதிகளை நீங்கள் குறிக்கும் போது, பின்வரும் வாக்கியங்கள் போன்றவற்றை நீங்கள் காணக்கூடும்:

என்னை நேசிப்பவனுக்கே நான் உரிமையாவேன்.
... மற்றவர்கள், சில வேளைகளில் பசியெனும் தெய்வீக உணவைக்கொண்டு தங்களுக்கு உணவூட்டிக்கொண்டனர்.

 

முழுமையாக இல்லாவிட்டாலும், பெரும்பாலுமாக, பயன்படுத்தப்படுகையில், பயத்தை போக்கவல்ல ஓர் அறிவு இறைவனின் அறிவெனும் பொக்கிஷங்களில் மறைக்கப்பட்டு கிடக்கின்றது.

 

(இறைவனின் அவதாரத்தை) கண்டுகொண்ட பிறகே மனிதனின் செயல்கள் ஏற்கத்தக்கவைகளாகின்றன.

 

எமது வெளிப்பாட்டை ஒப்புக்கொண்டு, எமது அறிவெனும் சமுத்திரத்திலிருந்து பருகி, எமது அன்பெனும் காற்றுமண்டலத்தில் வானளாவப் பறப்பவன் உண்மையாகவே அறிவு பெற்றவன் ஆவான்...

 

நீதியுடைய ஓர் அரசன் மற்ற எவரைக்காட்டிலும் இறைவனிடம் அதிகமான அனுக்கத்தை அனுபவிப்பவனாவான்.

உறுதியாகவே, தூய தங்கத்திலான நகரங்களை அடைந்தாலும் அவற்றைக் கருதாதமலும், பெரும் அழகும், மிகுந்த வனப்பும் வாய்ந்த பெண்களைச் சந்தித்த போதிலும் அவர்களிடமிருந்து அப்பால் திரும்பும் இவர்களே, மனிதர்கள் ஆவர்.
இந்நூல் வருங்காலத்தில் நுண்ணிய ஆய்வை மேற்கொள்ளத் தூண்டும் வரலாற்று விஷயங்களை வழங்குகிறது. உதாரணமாக, மாஸ்டர் அவர்களின் திருமணத்தைப் பற்றியும்; நியாவரானில் பஹாவுல்லாவின் கைது பற்றியும், எம்மாதிரி சங்கிலிகள் கொண்டு அவர் பிணைக்கப்பட்டார் என்பது பற்றியும்; கான்ஸ்டான்டிநோப்பிலில் உள்ள பாரசீக அதிகாரிகள் அவருக்கு எதிராக மேற்கொண்ட சதிகளைப் பற்றியும், அங்கு ஹாஜி-ஷேய்க்-முகம்மது-அலி தற்கொலை செய்து கொண்டது பற்றியும்; மிர்ஸா யாஹ்யா பாரசீகத்தை விட்டு தம்மைப் போல் நாடுகடத்தப்பட வில்லை என்பது பற்றியும்; மிர்ஸா யாஹ்யா பாக்தாத்திலேயே பாப் அவர்களின் எழுத்துக்களை கைவிட்டு விட்டது பற்றியும்; ஹாடி டௌலத் அபாடி பாயானின் பிரதிகள் யாவற்றையும் அழிக்க முனைந்தது பற்றியும்; அஸாலிகள்(மிர்ஸா யாஹ்யாவைப் பின்பற்றியவர்கள்) சிய்யிட்- ஜவாட்-இ-கர்பிலாயி அவர்களைத் தங்களில் ஒருவர் என உரிமை கொண்டாடி, மிர்ஸா யாஹ்யாவின் படத்திற்குக் கீழ் அவரது படத்தை ஒட்டி வைத்தது பற்றியும்; பஹாவுல்லா பாயான் திருநூலைப் படித்ததே இல்லை என்பது பற்றியும்; 1863ல் (இத்தேதி ‘இறைவன் கடந்து செல்கிறார்‘ நூலில் கொடுக்கப்பட்டுள்ளது) கமால் பாஷா எனும் துருக்கிய அதிகாரியிடம், அவருடைய அரசாங்கம் உலக மொழி மற்றும் எழுத்து குறித்து திட்டமிட ஒரு கூட்டத்தை கூட்ட ஆலோசனை வழங்கியது பற்றியும் (இதன் தொடர்பில், ‘வொலாபூக்‘ எனும் செயற்கை மொழி 1879ல் கொன்ஸ்டன்ஸ், பேடனைச் சார்ந்த ஜொஹான் மார்ட்டின் ஷ்லேயரால் புணையப்பட்டது; 1887ல் டாக்டர் லுடோவிச் லாஸாரஸ் ஸாமென்ஹொஃப்பினால் முதன் முதலில் எஸ்பராண்டோ மொழி எழுத்துபூர்வமாக விவாதிக்கவும் பட்டது.)

 

அது நமக்கு ஒரு நன்நெறிமுறையை வழங்குகிறது. அதன் உதாரணங்கள் பின்வருமாறு:

 

இறைவனின் பாதையில் உன்னை யாரேனும் திட்டினாலோ, உன்னைத் தொல்லைகள் அனுகினாலோ, பொறுமையுடன் இருந்து, செவிமடுப்பவரும், பார்த்துக்கொண்டிருப்பவருமாகிய அவரில் உனது நம்பிக்கையை வைப்பாயாக. உண்மையாகவே, அவரே, பார்த்தும், உணர்ந்தும், தமது அரசாட்சியின் வாயிலாக தாம் விரும்பியதைச் செய்தும் வருபவர்.

 

கோடை வெய்யிலைக்காட்டிலும் விவேகம் எனும் வாள் கடுவெப்பமுடையதாகும்... அவரது அருளால் உனக்கு வழங்கப்பட்டவைகளை ஏழைகளுக்குக் கொடுக்க மறுத்துவிடாதே. உறுதியாகவே, கண்டிப்பாக, அவர் நீ பெற்றிருப்பதை விட இருமடங்கு அதிகமாக அளிப்பார்.

 

வேறொருவர் இழைத்த பாவத்தைப் பற்றி நீ அறியவரும்போது, அதை மறைத்திடுவாயாக அதனால் உன் பாவத்தை இறைவன் மறைத்திடக்கூடும்.
துன்பங்களின் போது நன்றியுடையவனாக இருப்பாயாக... உனது தீர்ப்பில் நியாத்துடனும், உனது பேச்சில் எச்சரிக்கையுடனும் இருப்பாயாக... துயரமுற்றோருக்கு ஒரு புகலிடமாகவும், ஒடுக்கப்பட்டவனுக்கு உறுதுணையாகவும், அவனைக் காப்பவனாகவும்... அறிமுகமற்றவருக்கு ஓர் இருப்பிடமாகவும்... இருப்பாயாக...

 

இறைவன் மீதான பயம் தொடர்ந்தாற் போல் வலியுறுத்தப்படுகிறது:
இறைவனின் சேவகர்களும், சேவகிகளும் தூய்மையுடன் இருந்தும், இறைபயம் உடையவர்களாக இருந்திடுமாறும் யாம் அவர்களுக்கு கட்டளையிடுகின்றோம்... இறைபயம் என்றுமே... பாதுகாப்பான அரணாக.. இருந்துள்ளது... அவர்களுடைய (பஹாய்கள்) இதயங்கள் இறைபயம் எனும் ஒளியினைக்கொண்டு ஒளிபெறச் செய்யப்படுகின்றன...

 

திருக்குரான் நூலில் இதே போன்று இறைபயம் எவ்வாறு குறிப்பிடத்தக்க வகையில் போற்றப்படுகிறது என்பதை அந்நூலின் மாணவர்கள் ஞாபகத்திற்குக் கொண்டுவருவர்: ‘தம்மிடம் பயம் கொள்வோரை இறைவன் நேசிக்கின்றார்,‘ மற்றும் ‘எவர் இறைவனிடம் பயம் கொள்கின்றாரோ அவருடைய பாவச்செயல்களை அவர் அழித்துவிடுகிறார்...

 

இவ்விதமான பல கட்டளைகளுக்கிடையே பஹாவுல்லா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘அரசர்களுடைய நிலைக்கான மதிப்பு தெய்வீகமாக விதிக்கப்பட்டதாகும்...‘ மற்றும் ‘சீசருக்கு வழங்கவேண்டியதை‘ எனும் வார்த்தைகளுக்கு கிருஸ்துவ உலகத்தில் வழக்கில் இருந்து வரும் அர்த்தத்திற்கு மிகவும் மாறுபட்ட வகையில் பொருளுரைக்கின்றார். அவர்கள் 'சீசர்'(ஒரு மிகவும் பிரபலமான ரோமானிய பேரரசன்) என்பது கடவுள் எனும் சொல்லுக்கு நேர்மாறென பொருளுரைக்கின்றனர். ஆனால், இக்கருத்து அரசபதவி குறித்த பஹாய் போதனைகளுக்கு மாறுபட்டதாக உள்ளது.

 

இப்படைப்பில், பன்முறை எழுப்பட்டுள்ள ஒரு கேள்விக்குப் பஹாவுல்லா பதிலுரைக்கின்றார்: எதற்காக ஒரு புதிய சமயம்? அவர், முஸ்லிம்களை குறிப்பிட்டு, அப்படி அவர்களுக்கு பழமையே போதுமானதாக இருப்பின், பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுக்குப் பதிலாக அவர்கள் ஏன் திருக்குரானை ஏற்றுக்கொள்ள வேண்டும்? அப்படி அவருடைய குற்றம் ஒரு புதிய சமயத்தை தருவித்ததாக இருக்குமாயின், தமக்கு முன்பாக அதே குற்றத்தை முகம்மது அவர்களும் புரிந்துள்ளார், மற்றும் அதற்கும் முன்பாக மோஸசும் புரிந்துள்ளார். அவர் மேலும் கூறுவது:
அப்படி, இறைவனின் வார்த்தையை உயர்த்தியதும், அவரது சமயத்தை வெளிப்படுத்தியதுமே எனது குற்றமாக இருப்பின், பாவம் புரிந்தவர்களில் யானே பெரும் பாவியாவேன்! மண்ணுலகு மற்றும் விண்ணுலகங்களின் அரசாட்சிகளுக்காகக்கூட இவ்விதமான ஒரு ‘பாவகாரியத்தை‘ பண்டமாற்று செய்ய மாட்டேன்.

 

(இன்றைய அனைத்துலக ரீதியான ஈனநிலையை மறந்து இதே கேள்வியைப் பொதுமக்கள் கேட்பது விந்தையிலும் விந்தை; நாட்டில் பிராயணம் செய்யும் போது காணப்படக்கூடிய இரும்பு வாசல்களுக்குப் பின்னால் கற்கட்டிடங்களில் குழுமியும் தனிமையில் வாடியும் நிற்கும் இதயங்கள், தங்களைப்போலவே உள்ள மற்ற மனிதர்களை அடிமைகளாகப் பயன்படுத்தும் மனிதர்கள்; காலைவேளைகளில் பெரிய நகரங்களின் சாலையோர நடைபாதைகளையும், அதன் சாக்கடைகளில் கிடக்கும் குப்பைகளையும் பார்த்தாலே போதும். மருத்துவர்களின் நோய்க்குறிப்பேட்டையோ, தினசரிகளையோ பார்க்க வேண்டியதில்லை, நெறிமுறைகளின் சீர்கேடு நன்றாகவே தெரியும். (பலர் கூறிக்கொள்வது போல, நீங்களும் “நல்ல மக்களில்‘ ஒருவராக இருப்பின், அளவுக்கதிகமாக மதுவருந்தாத ஒருவராக இருப்பின், எவருக்கும் தீங்கு விளைவிக்காத ஒருவராக இருப்பின், ஆதலால், கீழ்ப்படிவதற்கு கடவுள் என ஒன்று தேவையில்லாமல் இருப்பின் - அல்லது தாங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட விளைவுகளற்ற இஷ்டதெய்வம் ஒன்றையே தேவையாக கொண்டும், தாங்கள் விரும்பும் போது மட்டும் அதன் விதிமுறைகள் சிலவற்றை பின்பற்றியும், வாரம் ஒரு முறை, கேட்கின்றார்களோ இல்லையோ, அதன் செயற்கையான இடி முழக்கங்கள் அவர்களை ஒருபோதும் முட்டாளாக்கியதும் இல்லை - எனும்போது, நீங்கள் பயனற்றவர், சமூகத்தில் நீங்கள் ஒரு பயன்விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை; சாலையோரங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் மனித உடல்களே உங்கள் மதுக்கிண்ணங்கள், தினசரிகளில் நீங்கள் படிக்கக்கூடிய மரணங்களே நீங்கள் பறைசாற்றும் உங்களுடைய நல்லெண்ணங்கள், மற்றும் பயனற்ற பல ஆண்களும் பெண்களும் அனுபவிக்கும் தேவையற்ற சித்திரவதைகளே உங்கள் பாலியல் செயற்கைப்பண்பாடும் ஆகும்.)

 

மேற்கு நாடுகளில் உள்ள பஹாய்கள் பாப் அவர்களைப் பற்றி இப்போது படிப்படியாக மேலும் அதிகமாக தெரிந்துகொண்டு வருகின்றனர்; "உதயத்தை வென்றவர்கள்," (பஹாய் வரலாற்று நூல்) பஹாவுல்லாவின் சமயகாலகட்டம், மற்றும் இங்கு கற்கப்படும் விஷயம், ஆகியவற்றின் வாயிலாக அவர்கள் அவரோடும், பஹாவுல்லாவுக்கான பாப் அவர்களின் அன்புடனும், அவரது வாழ்க்கையோடும் அனுக்கமாகியுள்ளனர். அவர் உச்சரித்தவைகளுள், தமது நம்பிக்கையாளர்களுக்கு அவர் விடுத்த குறிப்பிடத்தக்க வேண்டுகோள் ஒன்று உள்ளது. அதாவது, அவருக்குப் பின் ஒரு வேஷதாரியே தோன்றினாலும், அவர்கள் அம்மனிதனை எதிர்க்கவோ, அவனுக்கு துக்கம் ஏற்படுத்தவோ செய்யக்கூடாது. சிறிது காலத்திற்குள், சுமார் இருபத்தைந்து பேர்கள், இவர்களில் பெரும்பாலோர் பின்னாட்களில் பஹாவுல்லாவிடம் மன்னிப்பை வேண்டினர், இறைவன் வெளிப்படுத்தவிருப்பவர் தாங்களே என பிரகடணப்படுத்தினர். உண்மையான அவதாரத்தின் பாதுகாப்பை விரும்பியே பாப் அவர்கள் இவ்வாறு கூறினார். அவரே அவருடைய உண்மையான நிரூபணமாகும்:‘... ஒருவர் அவர் மூலமாக அல்லாது வேறு எவர் மூலமாகத்தான் அவரை அறிந்துகொள்வது? பாப் அவர்களின் மனத்தளர்வெனும் மூச்சு இங்கு வெளிப்படுகிறது, மற்றும் அவர் மொழிந்த சுந்தர வார்த்தைகளாக, ‘உறுதியாகவே, இறைவன் வெளிப்படுத்தவிருப்பவராகிய அவருடைய விரலில் உள்ள ஒரு மோதிரமே நான்...‘ என்பவை உள்ளன. பாப் அவர்களின் முன்னோட்டத்தை யோவான் அவர்களின் முன்னோட்டத்தோடு பஹாவுல்லா தொடர்புபடுத்துகிறார், மற்றும் யோவான் அவர்களின் தோழர்களும் அதே போன்றே ஆவியாகியவரை (இயேசுவை) கண்டுகொள்வதிலிருந்து தடுக்கப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்.
பண்ணிரண்டாவது இமாமின் மறுவருகையானவரின் (பாப்) அருகாமைக்கு மட்டும் நாம் கொண்டுவரப்படவில்லை, மாறாக, எல்லா இமாம்களின் அருகாமைக்கும் நாம் கொண்டுவரப்பட்டுள்ளோம். ஏனெனில், பாதுகாவலர் அவர்களும் இமாம் போன்றவராதலால், நமது சமயத்தின் பாதுகாவலர் ஸ்தாபனத்தின் அருகாமைக்கு நாம் கொண்டுவரப்பட்டதன் வாயிலாக எல்லா இமாம்களின் அருகாமைக்கும் நாம் கொண்டுவரப்பட்டுள்ளோம். ‘ஃகாயிம்‘ அவர்களின் ‘பனியின் வெண்மை‘ மிக்க கரங்கள் எனும் குறிப்பு திருக்குரானில் உள்ள மோசஸ் அவர்களின் சின்னத்தைக் குறிப்பிடுகின்றது. ‘வரி‘ என்பது, உண்ணா நோன்பு மற்றும் புனித யாத்திரை போன்ற சமயம் சார்ந்த கடமையாகிய சமயவரியைக் குறிப்பிடுகின்றது. ‘“யாமே வழியாவோம்... யாமே ‘வரியும்‘ ஆவோம், மற்றும் யாமே உண்ணா நோன்பாவோம், புனித யாத்திரையும் ஆவோம், மற்றும் புனித மாதமும் ஆவோம், புனித நகரமும் ஆவோம்... ” என இமாம் ஜாஃப்பார்-இ-சாதிக் கூறுகிறார். இமாம்களின் ஸ்தாபனம் குறித்து திரு இ.ஜி. பிரௌன் அவர்களின் சுருக்கவுரை மிகவும் இன்றியமையாததாக உள்ளது: ‘இமாமிய கண்ணோட்டத்தின்படி... உதவி-ஆட்சிக்காவலர் ஸ்தாபனம் என்பது (இமாம்கள், பாதுகாவலர் ஸ்தாபனம் போன்றவை) முற்றிலும் ஆன்மீகமயமான ஒரு விஷயமாகும்; முற்றிலும் இறைவனால் வழங்கப்படுகிறது, முதலில் அவருடைய அவதாரத்தின் வாயிலாகவும், பிறகு அவதாரத்தைத் தொடர்ந்து வருவோராலும் இது வழங்கப்படுகிறது... இறைத்தூதரின் தெய்வீகமாக நியமிக்கப்பட்ட வாரிசாக ஷியாக்களின் இமாம் உள்ளார். இவர் எல்லா நிறைவுகளையும், ஆன்மீக வெகுமதிகளையும் பெற்றவர், எல்லா மெய்யன்பர்களாலும் கீழ்ப்படியப்பட வேண்டியவர், இவரது தீர்மானம் இறுதியும், முடிவானதுமாகும், இவரது விவேகம் மனித சக்திக்கு மீறியதாகும், இவரது வார்த்தைகள் அதிகாரப்பூர்வமானவை.

 

இந்த நூலில், காட்சிகள் விரைவாகக் கடந்து செல்கின்றன. முதலில் இருட்டு நிலவறை, பிறகு கனவு, மற்றும் வாக்குறுதி ஆகியவை:

உறுதியாகவே, உம்மாலும் உமது எழுத்தாணியினாலும் உம்மை யாம் வெற்றி பெறச் செய்வோம்... உமக்கு உதவும் மனிதர்களாகிய -- பூமியின் பொக்கிஷங்களை இறைவன் விரைவில் எழச்செய்வார்...

பள்ளிவாசலில் ஹாஜி ஷேய்க் முகம்மது-அலியின் பரபரப்பான தற்கொலையைக் காண்கின்றோம். பிறகு, இறைவனுக்கு மகிழ்வூட்டும் வெண்மையைக் கொண்ட, கடல்கரையோரத்தில் வீற்றிருக்கும் அந்த நகரமும் உண்டு... உணர்வு வேறுபாடு அடைகிறது, விருவிருப்பு மாறுபாடு காண்கிறது. ஆன்மீக நிலையென இந்தத் துரிதக் கேள்விகளையும், பதில்களையும் இசை வடிவாக நீங்கள் செவிமடுக்கலாம்.
நேரம் கணிந்துவிட்டதா? இல்லை, அதனினும் மேலாக; அது கடந்தே சென்றுவிட்டது... மனிதர்கள் வீழ்த்தப்பட்டிருப்பதை நீர் காண்கின்றீரா? ஆம், எமது ஆண்டவரின் மீது ஆணையாக... நீர் பார்வையிழந்தவராவீர்... சுவர்க்கம் மர்ம மலர்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது... நரகம் கொழுந்துவிட்டு எரியச் செய்யப்பட்டுள்ளது.

 

மதபீடங்களின் முனகல்களின் சிந்தனையைத் தூண்டும் வரிகள்:
உனது ஆண்டவரின் அடையாளங்களின் பகலூற்றாகிய, “த” எனும் நிலத்தில்(தெஹரான்) யாம் நடந்துகொண்டிருந்தோம் -- அவ்வேளை, மதபீடங்களின் புலம்பல்களையும், இறைவன்பாலான அவற்றின் இறைஞ்சல்களையும் -- அவர் புனிதமும், மகிமையும் பெறுபவராக இருப்பாராக -- யாம் செவிமடுத்தோம். அவை ஓலமிட்டு... அந்தோ, அந்தோ!... உம்மால் நாங்கள் படைக்கப்பட்டும், வெளிப்படுத்தப்படாமலும் இருந்திருக்கக்கூடுமானால்!

 

பஹாவுல்லா அவர்களால் இதற்கு முன் குறிப்பிடப்பட்ட, குரானிய வாசகம் நமது ஞாபகத்துக்கு வருகின்றது: ‘இறைவா, எங்களுக்கும் குரல் அளிப்பவரே...‘ பிறகு, ‘பெண்-அரவத்திற்கான‘ பூமியையே அதிரவைக்கும் முன்னிலையணிவிப்பு:
பெண்-அரவமே, நடுநிலையோடு நியாயம் காண்பாயாக! எக்குற்றத்திற்காக இறைவனின் திருத்தூதரின் குழந்தைகளை நீ தீண்டினாய்...?

 

இது, முகம்மது அவர்களின் வழித்தோன்றல்களாகிய, ‘இரட்டை ஒளிவிடும் தீபங்களின்‘ தியாகமரணத்தைக் குறிக்கின்றது; இதற்கு கருத்துக்கள் கூற நாம் மைக்கலேஞ்சலோ அல்லது மில்டனைத்தான் (மேற்கத்திய கவிஞர்கள்) நாடவேண்டும்.

 

ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் நிலையில் இருப்பவர்கள், எந்த நூலை தங்களுடைய நூலகங்களுக்காக தேர்ந்தெடுப்பது என கேட்பார்கள். இந்த நூலை என் நூலகத்தில் நான் சேர்த்ததற்கான காரணம்: அதன் வாசகங்களின் சௌந்தர்யம், மொழிபெயர்ப்பு மற்றும் வாசகவடிவமைப்பு; அதன் சுருக்கம்; புலமைக் கண்ணோட்டத்தில் அதன் செழுமை -- ஆய்வுக்கு அஃது அளிக்கக்கூடிய விஷயங்கள்; அதன் விசாலத்தன்மை -- ஏனெனில், இது ஒரு தன்னிச்சையான படைப்பாற்றல்மிக்க காரியமாகவும், தனது சொந்த வடிவ ஐக்கியத்தைக் கொண்டும், அதற்கென தனிப்பட்ட உணர்வைக்கொண்டும் இருந்தபோதிலும் -- இது கிட்டத்தட்ட ஒரு பாமாலையாகவும், பஹாவுல்லா அவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகவும் உள்ளது.

 

ஆம், இது அவரது முன்னிலையை அடைய நமக்கு உதவுகிறது; ‘உலகம் ஒதுக்கித் தள்ளிய மற்றும் தேசங்கள் கைவிடவும் செய்த அவரிடம் நம்மைக் கொண்டு சேர்க்கின்றது...‘

 

ஆஃகா நஜப்ஃபீ இப்போது எங்கே? தனது பிரமாண்டமான வட்டத் தலைப்பாகயுடனும், தனது சுருண்ட காலனியுடனும் அவர் இப்போது எங்கே போய்விட்டார்? பஹாவுல்லா இவரது தோழரைக் குறிப்பிட்டதுபோல், இவர், மலை உச்சியில் காணப்படும் இறுதிச் சொட்டு ஒளி‘ ஆவார் அவர் தனது வெறுப்பையெல்லாம் எங்குதான் கொண்டு சென்றுள்ளார்? எப்படியான போதிலும், இது பஹாவுல்லாவிடமிருந்து நமக்குக் கிடைத்த இறுதியான லௌகீக பரிசாகிய இந்த நூலின் விசேஷ காலமாகும்; அவருடைய எதிரிகள் அவருக்கு விஷமளித்தனர், ஆனால், அவர் அதை தமது அன்பர்களுக்கு அமுதமாக மாற்றிவிட்டார்.

 

 

epistle

"ஓநாயின் மைந்தனுக்கான நிருபம்" நூல்

 

son of the wof

"ஓநாய்" என பஹாவுல்லா அவர்களால் பெயரளிக்கப்பட்ட ஷேய்க் முகம்மது பாக்கிர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

;